முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியல் பிழைத்தோர் - 2

மதவாதத்திற்கு முடிவுகட்டுவோம்...

6 மாதங்களுக்கு முன்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையிலிருந்து அதன் உறுப்புக் கல்லூரிகளுக்கு(Affiliated Colleges) ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகம்  பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாகவும் அதற்கு பதில் அரு.இராமநாதன் அவர்கள் எழுதிய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகம் இணைக்கப்படுவதாக இருந்தது அந்த சுற்றறிக்கை. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆட்சியர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது அந்த துறைத் தலைவர் தன்னை கேட்காமல் இந்த சுற்றறிக்கையை அனுப்பிவிட்டதாகவும் தான் அதை திரும்பப்பெறுவதாகவும் அண்ணாவின் 'நீதிதேவன் மயக்கம்' எனும் நாடகமே பாடத்திட்டத்தில் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும் ஆட்சியர், பாடத்திட்டத்தில் மாற்றம் என்பது அகாடமி கவுன்சிலின் அனுமதி பெறாமல் நடந்திருப்பதற்கு துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

நாட்டில் நிலவும் மதவாதத்திற்கும் மேலே நான் கூறிய நிகழ்விற்கும் என்ன பெரிதாக சம்மந்தம் இருந்துவிடப்போகிறது? ஆம்... சம்மந்தம் இருக்கத்தான் செய்கிறது. அறிஞர் அண்ணா எழுதிய பல நாடகங்களில் 'நீதிதேவன் மயக்கம்' என்பது மிகவும் முக்கியமான நாடகம். 1947 இல் வெளிவந்த இந்த நாடகம் இராவணன் இரக்கமில்லா அரக்கன் என்று கம்பர் எழுதிய தீர்ப்பை நீதிதேவனின் முன்பாக மறுசீராய்வு(Review) செய்ய்யப்படுவதாக புனைந்திருப்பர் அறிஞர் அண்ணா. அதில் இராவணன் கம்பர் எழுதியது எத்தனை தவறு என்பதையும் தேவர்களும், ரிஷிகளும் எத்தனை அநீதியானவர்கள் என்பதையும், தேவர்கள் என்றாலே நல்லவர்கள் அரக்கர்கள் என்று வர்ணிக்கப்பட்டவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்ற சமன்பாடே தவறு என்று தனது தரப்பு வாதங்களாக நீதிதேவன் முன்  வாதிடுவதாக தொடங்கிச் செல்லும் நாடகம், ஒரு கட்டத்தில் இராவணனது வாதத்தைக் கேட்டு நீதிதேவன் மயங்கிச் சரிவதாகவும் அப்போது நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் கம்பர் கால் தடுமாறி விழுவதாகவும் அவரை இராவணன் தாங்கிப்பிடிப்பதுமாக முடிகிறது. இராமாயணமும், மகாபாரதமும் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த அடையாளமாக முன்னிறுத்தப்பட்ட வேளையில் இப்படி ஒரு நாடகம் ஏற்படுத்திய தாக்கம் அத்தனை எளிதானதல்ல. புராண இதிகாசங்களிலிருந்தும் அது கூறுவது மட்டுமே தர்ம நீதியென்றும் அதனை கேள்விக்குட்படுத்தாமல் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற போதிக்கும் சித்தாந்தத்திற்கு நேரெதிராக விளங்கியது திராவிடச் சித்தாந்தம். அப்படியொரு புராணத்தை மீளாய்வு செய்வதாக பழமைவாதத்திற்கு எதிராக, பகுத்தறிவுச் சிந்தனைகளை தூண்டும் விதமாக புனையப்பட்ட(Fictitious) நாடகமே அறிஞர் அண்ணா எழுதிய 'நீதிதேவன் மயக்கம்'. இதனை நீக்கிவிட்டு தான் ஒரு பல்கலைக்கழகம் மற்றொரு பாடத்தை சேர்க்க வேண்டுமென்ற தேவை எங்கிருந்து வந்தது?

திராவிடக் கட்சிகள் மற்றும் பிற கல்லூரிப் பேராசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கவிட்டால் மாணவர்கள் அப்படியொரு படைப்பை தங்கள் பாடத்தில் படித்திருக்கவே மாட்டார்கள். மாறாக அவர்கள் சமயச்(Religious) சார்புடைய 'இராஜ இராஜ சோழன்' எனும் நாடகத்தை மட்டுமே படித்திருப்பார்கள். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் வரலாற்றை(History) வெறும் புராணங்களால்(Epics) மட்டுமே நிரப்பும் ஒரு போக்கு கடந்த ஐந்து வருட பாஜக ஆட்சியில் தொடர்கிறது. இது திட்டமிட்டு நிகழ்த்தப்படும் ஒரு பண்பாட்டு தாக்குதல். உண்மையான வரலாற்று பதிவுகளும், நவீனத்துவத்தை(Modernism) புனைவின் வழியாக எடுத்துரைக்கும் 'நீதிதேவன் மயக்கம்' போன்ற படைப்புகளும் தொடர்ந்து மறைக்கப்படும் போக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பல்கலைக்கழகங்களும் விதிவிலக்கல்ல, இந்தியாவின் பல பல்கலைக்கழகங்களில் சமயச் சார்புடைய இந்துத்துவ ஆதரவாளர்களை துணை வேந்தர்களாகவும், செனட் உறுப்பினர்களாகவும் நியமித்துக் கொண்டிருக்கிறது இந்த பாஜக அரசு. கல்விக் கட்டமைப்பின் மீதான திட்டமிட்டு நடைபெற்று வரும் தாக்குதல் இது. விமானம் என்பது இராமாயண காலத்திலேயே புஷ்பக விமானமாக இருந்தது என்றும் மகாபாரத காலத்திலேயே இண்டெர்நெட் இருந்தது என்றும் பேசிவரும் பாஜக அமைச்சர்கள் தான் நாட்டில் தொழில்நுட்பத்தையும் அறிவியலை வளர்த்தெடுக்க போகிறார்களா? அவர்கள் இதுபோன்ற பழமைவாத கருத்துகளை பேசுவதோடு நில்லாமல் அதனை கொண்டு வாக்கு கேட்கிறார்கள், அதிகாரத்திற்கு வரத் துடிக்கிறார்கள். உச்சகட்டமாக இதுபோன்ற பழமைவாத கருத்துகளை மாணவர்களின் மனதில் கல்வியின் வழியாகவே விதைக்கிறார்கள்.

மேலும் கடந்த ஐந்து வருட பாஜக ஆட்சியில் தொல்லியல் துறையில்(Department of Archaeology) நடைபெறும் அவலங்கள்களை நாம் உற்று கவனிக்க வேண்டியுள்ளது. வரலாற்று தொன்மங்களை மீட்டெடுப்பதும் அதனை பாதுகாக்க வேண்டிய இடத்திலுள்ள தொல்லியல் துறை இந்தியாவின் அனைத்து மொழிகளையும், அனைத்து தேசிய இனங்களையும் அதனை பற்றிய ஆய்வுகளையும் பாரபட்சமில்லாமல் நடத்த வேண்டும். ஆனால் தொடர்ச்சியாக திராவிட நாகரிகத்தின் தொன்மம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது என்பதை கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. அகழ்வாராய்ச்சி(Excavation) நடத்துவதற்கான அதிகாரம் மத்திய தொல்லியல் துறையினருக்கே உள்ள நிலையில்  தமிழகத்தில் ஆராயப்பட வேண்டிய இடங்களை மாநில தொல்லியல் துறையினர் பரிந்துரைத்தும் அதற்குரிய அனுமதியையும் அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதேயில்லை. தமிழகத்தில் காவிரிப் பூம்பட்டினம் அகழ்வாராய்ச்சிக்குப் பிறகு மத்திய தொல்லியல் துறை தமிழகத்தின் கீழடியில்தான் ஆய்வு நடத்தி இருக்கிறது. இதில் கி.பி. 300-ம் ஆண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டு வரையிலான தடயங்கள் கிடைத்தன. ஆனால், கீழடியில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன. கீழடியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து, அங்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டிருந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத், அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, துணை கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீராம் பணியில் அமர்த்தப்பட்டார்.  மத்திய பாஜக அரசு இதற்கு எதற்கு முட்டுக்கட்டை போடுகிறதென்றால் கீழடியில் இந்து மதம் மற்றும் அதன் குறியீடுகள் எதுவும் கிடைக்கவில்லை. மதங்களுக்கு அப்பாற்பட்ட இனமாக திராவிட நாகரிகம் இருக்கிறது. சமஸ்கிருதத்திற்கும் முந்தைய மொழியாக தமிழ் மொழி இருக்கிறது என்பதை திடடமிட்டு மறைக்கவே அங்கு நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் இந்து மத அடையாளங்கள் இருந்ததாகவும், சமஸ்கிருதமே பிரதான மொழியென்றும் நிறுவும் முயற்சியில் போலியான பதிவுகளை கொண்டு வரலாற்று திரிபுகள்(Historical Distortions) நடைபெற்றவண்ணம் உள்ளன.

இதையெல்லாம் விடவும் தற்கால அரசியலில் பாஜகவின் மதவெறி என்பது முன்பு குறிப்பிட்டதையெல்லாம் விடவும் மிகக் கொடியது. 2015 இல் இருந்து நாடெங்கிலும் பசுவின் பெயரால் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அரசின் கணக்குப்படி மட்டும் 36, உண்மையான வன்முறைச் சம்பவங்கள் இன்னும் அதிகமாகவே இருக்கலாம் என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். பசுக் காவலர்கள்(Cow Vigilantes) என்று சொல்லிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலைகளில் நின்று போலீசாருடனே வாகனங்களை சோதனையிடும் இந்துத்துவ அமைப்புகளின் ஆட்கள் வண்டிகளில் மாட்டிறைச்சி இருந்தால் அவர்களை அடிப்பதும் அந்த வண்டியை அடித்து நொறுக்குவதுமாக கடந்த ஐந்து வருடங்களில் இது போன்ற நிகழ்வுகள் வட இந்தியாவில் அதிகரித்திருக்கின்றன. இந்த வன்முறைச் சம்பவங்களில் பலர் இறந்தும் போகிறார்கள். பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட இந்துக்களாக இருக்கிறார்கள் அல்லது இஸ்லாமியர்களாக இருக்கிறார்கள். 2018 செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் மத்திய அரசையும், மாநில அரசுகளையும் இது போன்ற நிகழ்வுகளை தடுக்கவும் இவ்வாறு செய்ப்பவர்களின் தண்டனைகளை உறுதிப்படுத்தச் சொல்கிறது. இதன் பின்பு தான் இம்மாதிரியான சம்பவங்கள் ஓரளவு கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. அனால் இந்த சம்பவங்களில் பொதுவான விஷயமாக சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை போக்கு என்பது மட்டும் தொடர்ந்தே வருகிறது. இந்திய வரலாற்றில் இந்த இந்துத்துவ கும்பல் தொடர்ச்சியாக அரசியலாக முன்னெடுப்பது வெறும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மட்டுமே. அதன் மூலம் ஒரு கலவரத்தை உருவாக்கி அதில் மக்களை பிளவுபடுத்தி ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்கள் வேலை. இந்த வேலைத்திட்டத்தின் தலைமையகம் தான் நாக்பூரில் இருக்கும் ஆர்எஸ்எஸ் அலுவலகம். அதன் அரசியல் வடிவம் தான் பாஜக எனும் இந்து மதத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கும் கட்சி.

இப்படியான மத அடிப்படைவாதிகளை எந்த மதத்தில் இருந்தாலும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது தான் ஒரு அரசின் கடமை. அனால் சிறுபான்மையினர் மட்டுமே மத அடிப்படைவாதிகள் என்றும் நாங்கள் அப்படியல்ல என்ற பொய்யான பிரச்சாரத்தை முன்னெடுத்து அதன் வழியாகவே ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கும் பாஜக எப்படி அனைவருக்குமான ஒரு அரசாக இருக்க முடியும்? இவர்களது வெறுப்பரசியல் என்பது சிறுபான்மை மக்களின் மீது மட்டும் அல்ல. பிற சித்தாந்தங்கள் மீதும் தான் என்பதை அண்ணா எழுதிய நாடகத்தை நீக்கியதன் வழியாக நாம் பார்த்தோம். இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிரான கொள்கை உடையவர்களை இவர்கள் இரண்டு விதமாக எதிர்கொள்கிறார்கள். ஒன்று எதிர் கருத்து உடையவர்களை கருத்தின் வழியாக எதிர்கொள்ளாமல் அவர்களை இழிவு படுத்தி பெரியார், லெனின் போன்றவர்களின் சிலையை உடைத்து, அதன் மூலம் வெறுப்பை விதைப்பது. இரண்டாவது தான் நுட்பமான அரசியல். எதிர் தளத்தில் இருப்பவர்களை தனதாக்கிக் கொள்வது, அம்பேத்கர் ஒரு இந்துத்துவவாதி என்றும், சர்தார் படேலுக்கு சிலையெழுப்பியும் முழுவதுமாக தனதாக்கி கொள்வது. இதில் சர்தார் வல்லபாய் படேல் பற்றி நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அம்பேத்கரை இந்துக்களுக்கானவர் என்று முன்னிறுத்துவது முற்றிலும் இழிவான அரசியல். அம்பேத்கர் அனைத்து மக்களுக்குமான ஒரு தலைவர் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் இவர்கள் திட்டமிட்டு மறைக்க முயற்சிக்கிறார்கள்.

இந்தியா என்பது பல மதங்களும், பல தேசிய இனங்களும், ஒன்று கூடி வாழும் ஒரு பன்மைத்துவமிக்க நாடு. இங்கு சுதந்திரத்திற்கு பின்பு ஒரு காலத்தில் திராவிடம், கம்யூனிசம், சோசியலிசம் போன்று மக்களை ஒன்றிணைப்பதற்கான பல சித்தாந்தங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. அனால் இன்று நாட்டை ஆளும் பாஜகவும், இதற்கு முன்பு ஆண்ட காங்கிரசும் இந்தியாவின் பொருளாதாரத்தை கார்ப்பரேட்டுகளுக்காகவும், முதலாளிகளுக்கானதாகவும் மட்டுமே மாற்றியமைத்திருக்கிறார்கள். இதில் கடைசி ஐந்து வருடங்களில் இந்தியாவில் சமூக வளர்ச்சி என்பதையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் இந்துத்துவ சக்திகள் நாட்டை மத ரீதியாக பிளவு படுத்தி பின்னுக்கு தள்ளியிருக்கிறார்கள். அதனால் இந்த 2019 தேர்தல் என்பது மற்றொரு விதத்தில் மதவாதத்திற்கும் ஜனநாயகத்திற்குமான மோதல். நாம் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, மதத்தின் பெயரால் நம்மை பிளவுபடுத்தும் மதவாத சக்தியான பாஜகவை வீழ்த்துவோம், நவீன இந்தியாவை கட்டமைக்க ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எடப்பாடி பழனிச்சாமியும் இரசகுல்லா கடைக்காரரும்

இரண்டு வருடங்களுக்கு முன் 2017இல் ஒரு கல்லூரியில் நேர்காணலுக்காக கொல்கத்தா வரை செல்ல நேர்ந்தது. வங்க மொழி(பங்ளா) தெரியாது, இந்தியும் தெரியாது, தெரிந்ததெல்லாம் தமிழ் மற்றும் இந்திய ஆங்கிலம் மட்டுமே. ஒரு வாரம் அங்கு தங்க வேண்டிய சூழல், ஆனால் அந்த ஒரு வாரத்தில் ஒரு முறை கூட பங்ளாவோ, இந்தியோ தெரியாத குறையை கொல்கத்தா எனக்கு சிரமமாக முன்னிறுத்தவில்லை. டேக்சியில் பேரம் பேசுவது தொடங்கி, பேருந்துகளில், டீ கடைகளில், உணவகங்களில், நான் நேர்காணலுக்கு சென்ற கல்வி நிறுவனத்தில், சுற்றிப் பார்க்க சென்ற இடங்களில் என எங்குமே எனக்கு பங்ளாவோ, இந்தியோ தேவைப்படவில்லை. வங்க மக்கள் என் மொழியின் காரணமாக எனக்கு எந்த குறையையும் வைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இத்தனைக்கும் அவர்கள் நான் வங்க மொழி பேசுபவன் அல்ல என்பதை உணர்ந்ததும் என்னுடன் அதிகமாக உரையாட விரும்பினர் என்றே எனக்கு தோன்றியது. உதாரணமாக நான்கு நாள் நேர்காணலில் ஒரு நாள் நான் தங்கியிருந்த அறைக்கு திரும்புகையில் கொல்கத்தா மாநகரப் பேருந்தில் ஒரு கன்டக்டர், மாநில பேருந்துகளில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவர்களைதான் பணியமர்த்துவார்கள், அவர் ஒரு வங்காளி. அவ...

புறநகர்

அவனுக்கு தெரியாத ஊரில் எனக்கு புரியாத மொழியில் வழி கேட்டான் ஒருவன் என்னிடம் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எனக்கே தெரியாத அந்த ஊரில் அவனுக்கு புரியாத மொழியில் ‘தெரியாது’ என்று சொன்னேன் நான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது… எங்கள் அருகில் நகரின் பூர்வகுடி ஒருவன் எட்டு ரூபாய் பேருந்துக்காக காத்திருந்தான் நகரம் பார்த்துக்கொண்டிருந்தது…